14 December 2018

பெரும்பான்மையினரின் உரிமைகளை மட்டும் பாதுகாப்பது ஜனநாயகமல்ல

பெரும்பான்மை ஆதரவு, சிறுபான்மை ஆதரவு என்ற சொற்பதங்கள் இன்று காலம் கடந்தவை ஆகியுள்ளன. சர்வதேச சட்ட சொற்பதங்களின் பட்டியலில் இவை பெறுமதி இழந்த பதங்களாகவே கணிக்கப்படுகின்றன.
ஜனநாயகம் என்பது யாருக்காக? பெரும்பான்மையினருக்கா, இல்லை சிறுபான்மையினருக்கா? அல்லது இரண்டு தரப்பினருக்குமா என்று சர்வதேச சட்டவல்லுனர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
பெரும்பான்மை அதிகாரம் அல்லது பெரும்பான்மையினரின் உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு சிறுபான்மையினரின் உரிமைகளை அப்பட்டமாக மீறுவது ஜனநாயகம் அல்ல.
பெரும்பான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது என்பது சிறுபான்மையினரின் உரிமைகளை மிதிப்பது அல்ல. சிறு தப்பபிப்பிராயத்துடன் கூடிய ஜனநாயகம் என்பது அனைவருக்குமானதாகும். அபிவிருத்தி, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நீதி ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதே ஜனநாயகமாகும்.
ஜனநாயகம் என்ற பெயரிலும் அரசியலமைப்பு என்ற பதத்திலும் இலங்கை அண்மையில் எதிர்கொண்ட மோசமான விளைவுகளைப் பார்க்கும் போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தும் ஒரு கட்சி வெறுமனே பார்வையாளராகவே பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியிருந்தது.
அனைத்து ஆளும் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளுடன்தான் மக்களைச் சந்திக்கின்றன. அந்த தேர்தல் வாக்குறுதிகள் மக்களை மகிழ்ச்சியாகவும் சமாதானத்துடனும் வாழ வைக்கும் வகையில் அமைவதால் மக்கள் அக்கட்சிக்கு வாக்களிக்கின்றனர். ஜனநாயகத்தின் மீது மதிப்பு வைத்து மக்கள் இவ்வாறு அக்கட்சிக்கு வாக்களித்த போதும், குறிப்பிட்ட அக்கட்சி உறுப்பினர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதுடன் கட்சித் தாவல்களிலும் ஈடுபட்டு அக்கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்கின்றனர்.
மற்றொரு கட்சிக்கு மாறுவதற்கு அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்க, அவர்களுக்கு வாக்களித்த மக்களோ ஏமாந்த சோணகிரியாகி விடுகின்றனர். இப்படிப் பார்க்கும் போது பாராளுமன்றம் ஒரு அதியுயர் பீடம் என்று கூற முடியுமா? ஆனால் பாராளுமன்றம் ஒரு அதியுயர் பீடமாக அமையலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அது எவ்வாறு அமையும்?
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த மக்களின் உண்மையான அபிலாஷைகளின்படி நடந்து கொள்வார்களேயானால் பாராளுமன்றம் அதியுயர் பீடமாக அமையும் என்று கூறலாம்.
நாட்டின் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் விஞ்ஞானபூர்வ முன்னேற்றத்தை பாராளுமன்றம் சிறப்பாக நிர்வகிக்குமேயானால் அதனை அதியுயர் பீடம் என்று கூற முடியும்.
ஒட்டுமொத்தமாக மக்கள் பயன்பெறும் வகையிலான சட்டங்களை இயற்றி, சட்டத்தின் ஆட்சியை நீதித்துறையின் எந்தவொரு இடையீடும் இன்றி பேண முடிந்தால் பாராளுமன்றத்தை ஒரு அதியுயர் பீடம் என்று கூறலாம்.
பாரிய திட்டங்களின் போது ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோர் மற்றும் வங்கி செயற்பாடுகளின்போது மோசடி மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவோரை கைது செய்ய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன் அவ்வாறு ஊழல் மோசடி மூலம் இழந்த சொத்தை மீளப் பெற பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்குமாயின் அதனை அதியுயர் பீடம் என்று கூறலாம்.
அப்பாவி மக்கள் வரியாகச் செலுத்தும் பணத்தை அதிக அளவு வீண் விரயம் செய்யாமல், செல்வச் செழிப்பு வாழ்க்கையை தவிர்த்து, சாதாரண வாழ்க்கையில் ஈடுபட பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வருவார்களாயின் பாராளுமன்றத்தை அதியுயர் பீடம் என்று கூறலாம்.
பெரும்பாலான ஆசிய நாடுகளில் தேர்தலில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து விடுகின்றனர். பொதுச் சொத்தை திருடுவதும், தங்கள் சொத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிப்பதும் அவர்களுக்கு முக்கியமாகி விடுகின்றன. பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் கிடைக்கும் கமிஷன், பொதுச் சொத்துக்களை வெளிநாட்டினருக்கு விற்பது, தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்வது, அதன் மூலம் கமிஷன் பணத்தை சேர்ப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளாக மாறி விடுகின்றன.
ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதை விட தமது குடும்பத்துக்கு சேவையாற்றும் இந்த வழக்கம் எங்கள் நாட்டில் மட்டுமன்றி ஆசியாவின் பல நாடுகளிலும் உள்ளது. எனவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்ல. அது நாட்டின் மக்களுக்காகவேயாகும் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி அதன் பிரகாரம் செயற்படவும் வேண்டும். அதன் மூலமே அவர்கள் பாராளுமன்றத்தை அதியுயர் பீடமாக மாற்றலாம்.
மக்களுக்கு நன்மை ஏற்படாவிட்டால், அவர்களது அபிலாஷைகள் தவறாக பிரதிபலிக்கப்பட்டால், அவர்களது நம்பிக்கை சிதறடிக்கப்பட்டால், அவர்களது வாக்களிப்புத் தெரிவும் பிழையாக அமைந்துவிட்டால், அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிய அந்த சட்டத்தை அவர்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
சி.ஜி. இலங்ககூன்
(DAILY NEWS)

22 November 2018

தமிழ்த்தேசியத் தலைமைக்கு - நடேசன்

ரோம இராச்சியம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்பார்கள். அதேபோல் ஜனநாயக அரசியலில் சிறிய விடயங்களும் பல காலம் விவாதிக்கப்படும். சில செய்து முடிக்கப்படும். பல செய்வதற்கு மேலும் காலமெடுக்கும். இது ஜனநாயகத்தின் முக்கிய பலம். அதே நேரத்தில் பலவீனமும் கூட . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது.
சர்வாதிகாரிகளால் மட்டுமே நினைத்த காரியத்தை விரைவாக முடிக்க முடியும். அவர்களிடமிருந்து விலகிவிடவே நாம் விரும்புகிறோம். இலங்கையில் எந்தச் சிங்கள அரசியல்வாதிகள் பதவிக்கு வந்தாலும் தமிழர் விடயத்தில் சாதகமாக நடக்கமுடியாது. அந்த நிலையில் ரனில் விக்கிரசிங்க, மகிந்த இராஜபக்ச போன்ற அரசியல்வாதிகளால் இந்தியா மற்றும் வெளிநாட்டு அழுத்தத்திற்கு இசைந்து தமிழர்களுக்கு சாதகமாக வாக்குறுதி அளித்தாலும் எதுவும் பெரிதாக செய்ய முடியாது. இது அவர்கள் குற்றமல்ல. அடுத்த தேர்தலில் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் பிரசாரம் செய்யக் காத்திருப்பார்கள். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஜே ஆர் ஜெயவர்த்தனா எதிர்த்ததும், சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் தீர்வுப்பொதியை ரனில் விக்கிரமசிங்கா எதிர்த்ததும் மறக்க முடியுமா?

இன்னமும் சிங்கள மக்களிடம் உடலில், உள்ளத்தில் போரின் ரணங்கள் ஆறாமல் இருக்கிறது.

நமக்கு மட்டும் ஆறிவிட்டதா? லட்சம் உயிர்கள் என்பது சும்மாவா?

வட- கிழக்கு இஸ்லாமியர்கள் போர் காலத்தை மறந்துவிட்டார்களா?

இவற்றின் மத்தியில் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். மனிதர்கள் வாழவேண்டும். அதுவும், இப்புவியில் ஒரு முறை வாழத்தான் முடியும். தேர்தல் மாதிரி மீண்டும் சந்தர்ப்பம் வராது. ஐயா சம்பந்தர் பாராளுமன்றம் போவது மாதிரியல்ல.
உணவின்றி வைத்திய வசதியின்றி ஒரு நாள் இருந்திருக்கிறீர்களா?

ஏழைக் குழந்தைகள் கல்வி கற்கவேண்டும். வைத்தியவசதி போக்குவரத்து உத்தியோகம் எல்லாம் வேண்டும்.
இவைகளைத் தருவது இலங்கை அரசே.

இந்த நிலையில் தமிழர்களுக்கு முன் இருக்கும் ஒரே ஆயுதம் இராஜதந்திரமே. அதைப்பாவிக்க  மறுக்கிறீர்களே?

இலங்கையில் எந்தச் சிங்கள அரசியல் கட்சியும் இலகுவில் சிறுபான்பையினரது ஆதரவற்று அரசாளமுடியாது என்ற இந்த அரசியல் அமைப்பு சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்ட வரம். இதை மலையகத்தில் மறைந்த தொண்டமானும், மறைந்த அஷ்ரபும் மிகவும் திறமையாக பாவித்து தாங்கள் சார்ந்த மக்களை முன்னேற்றியிருக்கிறார்கள் அவர்களைப் பின்பற்றி பிற்காலத்தில் வந்தவர்கள் முடிந்த அளவில் செய்திருக்கிறார்கள். இதை,அந்த மக்கள் வாழும் பிரதேசத்திற்கு போய் வரும்போது நாம் புரிந்துகொள்ள முடியும்.

இதற்கப்பால் நமது அரசியல் சமூகத் தலைவர்கள் சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களிடம் சென்று ஐக்கிய இலங்கையில் இன, மத பேதங்களை மறந்து வாழ்வதற்காக வேலை செய்யவேண்டும். நம்பிக்கையை ஊட்டவேண்டும். முப்பது வருடகாலப் போரில் எல்லா இன மக்களும் காயமடைந்திருக்கிறார்கள். இதை விட முக்கியமாகப் போர் நடந்த காலத்தில் தமிழர் மத்தியில் எப்படி தமிழர் என்ற இனவாதம் வளர்க்கப்பட்டதோ அதேபோல் சிங்கள மக்களிடம் இனவாதமும், இஸ்லாமிய மக்களிடம் மதம் சார்ந்த எதிர்ப்புணர்வுகள் வளர்க்கப்பட்டிருக்கிறது. இதில் யாரையும் குறை சொல்லத் தேவையில்லை. இப்படியான உணர்வுகள் போர்க்காலத்தில் கத்தி தீட்டப்படுவதுபோல் மனித மனங்களில் நஞ்சாக ஊட்டப்படும் .

இவற்றைச் சரி செய்யாது போரின் பின்னான ஐந்து வருடங்களும் ராபக்சவுக்கு எதிரான சகல நடவடிக்கைள் மட்டுமல்ல, ஐக்கிய இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் காலம் கழித்தார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.

1) ராஜபக்சவுக்கு எதிரான அணியில் போர்த் தளபதியை ஜனாதிபதியாக ஆதரித்தது          ( போரில் இருவருக்கும் பங்கிருக்கு

2)யுத்தத்தின் பின்னர் ஜெனிவாவில் முறையிட்டது

3) அத்துடன் முக்கியமாக அரசியலே தெரியாத ஒரு மனிதரை வட மாகாண முதலமைச்சராகி அவர் மூலம் விடுதலைப்புலிகளின் தலைவர் விட்டுச் சென்ற சிங்கள எதிர்ப்பைப் பேசி இனவாதத்தை மீண்டும் கூராக்கியது

இவை தவறு அல்லது சரியானது என்பதல் முக்கியம். எந்த வகையிலாவது தமிழர்களுக்கு பயனளித்திருந்தால் பரவாயில்லை என ஏற்றுக்கொளள முடியும் .

1)சரத் பொன்சேகா தோற்றார் .

2)ஜெனிவா இரப்பராக இழுபடுகிறது.

3)விக்கினேஸ்வரன் தான்சார்ந்த கட்சிக்கும், தனக்கும் சூனியம் வைத்தபடி இருக்கிறார்.

நிலத்தில் தளை அடித்து கயிற்றில், புல்மேயக் கட்டிய மாடுபோல் ஆரம்பித்த இடத்திலே மீண்டும் வந்து சேர்த்திருப்பதால் உங்கள் அரசியல் அணுகுமுறை, பிரிவினை கோரியது போன்று வெறும் கோசம் மட்டுமே என்பது புரியவில்லையா? உங்களுக்குத் தொலைநோக்கு இல்லை என்பது புரியவில்லையா?

ஒரு விவசாயியின் அறுவடையே அவனது விவசாயத் திறமையே. வியாபாரியாக இருந்தால் அவனது இலாபமே அவனது வருமானம்.

எவ்வளவு ஆழமாக உழுதீர்களோ, பயிருக்கு மருந்தடித்தீர்களா? அல்லது இரவுபகலாக வியாபாரத்தில் ஈடுபட்டீர்களா எனக் குடும்பத்தினர் கேட்பதில்லை. உணவும் பொருளுமே அவர்களுக்குத் தேவை.

ஆனால் தமிழ் அரசியலில் மட்டும் ஏமாற்றத்தையும் முட்டாளத்தனத்தையும் அறுவடையாக சந்தோசமடையும் அரசியல்வாதிகளும் அவர்களை மீண்டும் மீண்டும் தேர்தெடுக்கும் மக்களும் நினைக்கிறார்கள்.

என்ன கொடுமையிது?

பின்னே பார்த்தபடி வாகனத்தைச் செலுத்தும் சாரதிகளையே அவர்கள் விரும்புகிறார்கள்.

கடந்த மூன்று வருடங்கள் மைத்திரிபால சிறிசேன – ரனில் விக்கிரமசிங்க என்று தமிழ் மக்களை வாக்குப் போடக் கேட்டீர்கள். மக்கள் உங்கள் சொல் கேட்டு நடந்தார்கள். அவர்கள் அரசியலுக்கு முண்டு கொடுத்து அவர்களது வாக்குறுதியை நம்பினீர்கள். மக்களையும் நம்பவைத்தீர்கள். யேசுநாதர் மீண்டும் பிறப்பார் என நம்பும் சில கிறீத்தவர்களைப் போல் .

தற்பொழுது அந்த அணி பிரிந்து விட்டது. நீங்கள் அம்மணமாகிவிட்டீர்கள் அந்த அம்மணத்தை மறைப்பதற்காக இலங்கையின் ஜனநாயக்தை பாதுகாப்பதாக முழக்கமிடுகிறீர்கள்.

புதுக்கோசம்!

ஆனால் என்ன? உங்களை நம்புவதற்குப் பலர் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

இலங்கையில் 1971 மக்கள் விடுதலை முன்னணியினது கிளர்ச்சி காலத்திலோ பின்பு முப்பது வருடப்போர்க்காலத்திலோ இலங்கையில், முக்கியமாகத் தென்பகுதியில் ஜனநாயகம் அழியாது இருந்தது. ரொபேட் நொக்ஸ் எழுதியது போல் “உடலில் ஒட்டிய சேற்றை கழுவினால் ஒவ்வொரு சிங்கள விவசாயியும் மன்னராகத் தகுதியானவன்” . என்னைப் பொறுத்தவரையில் சிங்களமக்கள் பெரும்பான்மையாக இருக்குவரை இலங்கையில் ஜனநாயகம் இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்

தற்போது கொழும்பில் நடைபெறுவிடயங்கள் தேநீர்க் கோப்பையில் எழும் சூறாவளி போன்றவை . அவை கடந்து போகும்

எனது கேள்வி போரின் பின்பு தமிழ்த்தலைவராகிய சம்பந்தனால் அவரை தேர்தெடுத்த தமிழர்கள் அடைந்த நன்மை என்ன ? 80 வயதிற்கு மேலான சம்பந்தன் இதுவரையும் தமிழர்களினது சார்பாக நடத்திய அரசியலின் எச்சமென்ன ?

பிரபாகரனது போரின் பயன்பாடுபோல்த்தானா?

கொழும்பில் இருந்து மதியூகி என யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த சுமந்திரன் இறுதியாக டான் ரீவி கலையகத்தில் என்னைச் சந்தித்தபோது இம்முறை தீர்வு எதுவும் கிடைக்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் சிறந்த வக்கீல். மிகவும் திறமையாக பாராளுமன்றத்தில் பேசுவார். ஆனால் அவரது தொழிலில் வெற்றி என்பது என்ன என அவருக்குத் தெரியும். கிறிஸ்தவப் போதகராக இருந்த நேர்மையான மனிதர். ஆனால் இவர் இரண்டு வருடங்களில் அரசியலில் இருந்து விலகும்போது தமிழர்களுக்கு எதை விட்டுச் செல்வார்?

மற்றவர்களை நான் குறிப்பிடவில்லை. காரணம் அவர்கள் வேறு நோக்கத்தில் அரசியல் செய்பவர்கள்

செல்வநாயகம் -பொன்னம்பலம் மற்றும் அமிர்தலிஙகம்- சம்பந்தன்- சுமந்திரன் என்று எமது கதைதொடர்கிறது.

சில வேளை நினைக்கிறேன் . தமிழ் அரசியல்வாதிகளில் தவறில்லை அவர்களுக்கு வாக்களிப்பவர்கள் திருந்தாதபோது விக்கிரமாதித்தன் கதையாகத் எமது ஏமாற்றங்கள் தொடர்வது தவிர்க்கமுடியாது.

ஏதோ ஊரில் சொல்வது நிவைில் வருகிறது.

“வயிற்றுக்குள் இருக்கும் மலத்தைக் கொழுப்பென நினைப்பதில் நமக்கு நிகர் எவருமில்லை.”

நன்றி - தேனீ இணையம் 

18 November 2018

இலங்கையில் நெருக்கடி

கடந்த மூன்று வாரங்களாக மைத்திரி ஸ்ரீசேனா மேற்கொண்டுவரும் தன்னிச்சையான நடவடிக்கைகளின் காரணமாக ஓர் அரசியல் மற்றும் அரசமைப்புச்சட்ட நெருக்கடிக்குள் இலங்கை சிக்கிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயை டிஸ்மிஸ் செய்திருப்பதுடன்,  முந்தைய எதிராளியான மகிந்தா ராஜபக்சேயைப் பிரதமராக அக்டோபர் 26 அன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

ஸ்ரீசேனா, ஸ்ரீலங்கா விடுதலைக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதையும்,  ராஜபக்சேயிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டிருந்தவர் என்பதையும் நினைவுகூர்ந்திடவேண்டும். 2015 ஜனவரியில் நடைபெற்ற தேர்தலின்போது விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, ராஜபக்சேயைத் தோற்கடித்திருந்தார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா விடுதலைக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன.

தற்போது ஸ்ரீசேனாவிற்கும், விக்ரமசிங்கேயிற்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் தற்போதைய நெருக்கடிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ராஜபக்சே ஆதரவுடன் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா மக்கள் கட்சி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை ஈட்டியது. இது ஆளும் கூட்டணியில் நெருக்கடியை ஆழப்படுத்தியது. நாட்டில் பொருளாதார நெருக்கடி ஆழமாகியிருந்ததன் விளைவாக மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த அதிருப்தியே இவ்வாறு கூட்டணியில் இருந்த இரு பெரிய கட்சிகளுக்கு இடையேயான விரிசலுக்கு முக்கிய காரணமாகும்.

பிரதமர் விக்ரமசிங்கேயை நீக்கியது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானதாகும். ஸ்ரீசேனா – விக்ரமசிங்கே கூட்டணியால் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 19ஆவது திருத்தம், ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றிற்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. புதிய ஷரத்துக்களின்படி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டாலன்றி, பிரதமரை நீக்கிட முடியாது.

ஸ்ரீசேனா, ராஜபக்சேயை பிரதமராக்குவதற்காக பல்வேறு தில்லுமுல்லு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் குதிரை பேரத்தின் மூலமாக எப்படியாவது பெரும்பான்மையைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தார். நாடாளுமன்றம் கூடிய சமயத்தில், ராஜபக்சேயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஸ்ரீசேனா நாடாளுமன்றத்தைத் தன்னிச்சையாகக் கலைத்து, ஜனவரி 5 அன்று தேர்தல்கள் என்று அறிவித்தார்.

மீண்டும், அரசமைப்புச்சட்டத்தின் 19ஆவது திருத்தத்தின்கீழ், ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை அதன் முதல் நான்கரை ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் கலைத்திட முடியாது. நாடாளுமன்றும் அவ்வாறு அதன் முழுமையான காலத்திற்கு முன்பு கலைக்கப்பட வேண்டும் என்று கருதினால், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களித்திட வேண்டும்.  தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் காலம் இதுவரை மூன்று ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதால், இந்த சமயத்தில் இதனைக் கலைத்திட ஜனாதிபதி முடிவு செய்திருப்பது அரசைமைப்புச்சட்டத்திற்கு விரோதமானதாகும்.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன போன்ற இதர எதிர்க்கட்சிகளும் மனுச் செய்தன. இந்த மனு மீது தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வாயம் டிசம்பர் 7 வரையிலும் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்குத் தடை விதித்தது. மேலும் ஜனவரி 5 அன்று தேர்தல் நடத்துவதற்கான தயாரிப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.‘

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அவையை அடுத்த நாளே, அதாவது நவம்பர் 14 அன்று கூட்டினார். அன்று ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. ராஜபக்சேயின் ஆதரவாளர்கள், வாக்கெடுப்பு நடந்த விதத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதாக ஜனாதிபதி ஸ்ரீசேனா ஏற்றுக்கொள்ளாததால் நெருக்கடி தொடர்கிறது.

இந்தியாவில் இருக்கின்ற பிரதான ஊடகங்கள், இலங்கைப் பிரச்சனையானது, சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியின் வெளிப்பாடு என்று கூறுகின்றன. ராஜபக்சே, ஒரு சீன ஆதரவாளராக சித்தரிக்கப்படுகிறார். விக்ரமசிங்கே மேற்கத்திய ஆதரவு மற்றும் இந்திய ஆதரவாளராக பார்க்கப்படுகிறார். எனினும், தற்போதைய நெருக்கடிக்கு, பிரதானமாக அந்நிய நாடுகளின் தலையீடு காரணம் என்று கூறிட முடியாது. இதற்குப் பிரதான காரணம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி 2015இல் கூறியபடி ஜனநாயக நிலைமாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் தோல்விகண்டதும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அதனை மீட்டெடுக்கக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகளை உருவாக்குவதில் தோல்வியடைந்ததுமே இதற்குப் பிரதான காரணமாகும்.

கடந்த பல ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த நவீன தாராளமயக் கொள்கைகள்தான் பொருளாதார நெருக்கடி விளைந்ததற்கே காரணமாகும். விக்ரமசிங்கே அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் சுதந்திர சந்தைக் கொள்கைகளே நெருக்கடியை உக்கிரப்படுத்தின. 2017ஆம் ஆண்டில் வளர்ச்சி 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. மலைபோல் உயர்ந்துள்ள கடன் மற்றும் ஏற்றுமதி – இறக்குமதி சமநிலை நெருக்கடி (balance of payment crisis) ஆகியவை அரசாங்கத்தை சர்வதேச நிதியத்திடம் ஒரு மூன்றாண்டு காலத்திற்கு 1.5 பில்லியன் டாலர்கள் பிணை எடுப்பு தொகுப்பு (bailout package) பெற நிர்ப்பந்தித்தது. இதற்க சர்வ தேச நிதியம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

அத்தியாவசியப் பொருள்களின் மீதான மானியங்கள் வெட்டு, அரசுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், பொதுக் கல்வி முறையையும் தனியாரிடம் தாரைவார்த்துக் கொண்டிருத்தல், பணவீக்கம் போன்ற அனைத்தும் மக்களின் வாழ்நிலைமைகளைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. சமீப காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உட்பட உழைக்கும் மக்களில் பல்வேறு பிரிவினரின் போராட்டங்களையும் பார்க்க முடிந்தது.

தமிழ் பேசும் வட மாகாணத்திற்கு இயல்புநிலையை மீளவும் கொண்டுவருவதற்காக அரசமைப்புச்சட்ட சீர்திருத்தங்களை நோக்கி நகர்வதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே விரிசல் அதிகரித்துக்கொண்டே வந்ததால் இதில் முன்னேற்றம் ஏற்படாமல் ஸ்தம்பிப்பு நிலை ஏற்பட்டது. ராஜபக்சே திரும்பவும் அதிகாரத்திற்கு வருவதைப் பொறுத்தவரையில் தமிழ் அமைப்புகள் மத்தியில் நியாயமானமுறையில் ஐயுறவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதற்கான ஆணிவேர் என்பது 1978இல் நிர்வாக அதிகாரங்களை ஜனாதிபதிக்கு அளித்து அங்கே கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை (executive presidency)யாகும். தற்போதுள்ள அரசாங்கம் இதனைக் கைவிடுவதாக உறுதிமொழி அளித்திருந்தது. எனினும், அரசமைப்புச்சட்டத்தின் 19ஆவது திருத்தமானது ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றை மட்டுமே கட்டுப்படுத்தி இருக்கிறது. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அதீதமாக இருந்தது போன்று, எதேச்சாதிகாரம் நோக்கிச் செல்வதற்கு இருந்து வரும் அச்சுறுத்தல்  இப்போதும் தொடர்கிறது. தற்போது ஜனாதிபதி ஸ்ரீசேனா எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அவற்றிற்குச் சாட்சியமாக அமைந்திருக்கின்றன.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி எந்தவிதத்தில் தீர்வுகாணப்பட்டாலும், ஆளும் வர்க்கங்களின் தற்போதைய கொள்கைகள் கைவிடாப்படாதவரையில், இலங்கையானது ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூக நீதிக்கான பாதையில் முன்னேறுவது சாத்தியமில்லை.


(நவம்பர் 14, 2018)

(தமிழில்: ச.வீரமணி)


நன்றி- தேனீ இணையம்

16 November 2018

ஸ்ரீலங்காவின் தேசிய நெருக்கடி என்னவென்பதைப் பார்ப்போம் - அகிலன் கதிர்காமர்

சிறிசேன - ராஜபக்ஸ கூட்டணி ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் பன்மைத் தன்மைக்காக சவால் செய்யப்பட வேண்டும்
கடந்த இரண்டு வார காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்றம் இடையே தோன்றியுள்ள ஒரு சுமுகமற்ற நிலை காரணமாக அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா சாட்சியாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் மற்றும் ஜனநாயகமற்ற ஒரு நியமனமாக மகிந்த ராஜபக்ஸவைப் பிரதமராக நியமித்த பிறகு, பாராளுமன்றத்தை இடைநிறுத்தி பின்னர் அதைக் கலைப்பதாக நவம்பர் 9ந்திகதி அறிவித்து உடனடியாக பொதுத் தேர்தல் நடத்துவதாக திரு. சிறிசேன அறிவித்தார்.
நீதிமன்றத்தின் தலையீடு
குறிப்பிடத்தக்க வகையில், உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கலைக்கப்படுவதை  வரும் டிசம்பர் 7ந்திகதி வரை இடைநிறுத்தியுள்ளது. அதேவேளை அதிகாரப் போராட்டம் தொடருகிறது, 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஜனநாயக ஆட்சி மாற்றத்தின்; பயனாக, திரு. சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்காவின் அரசாங்க நிறுவனங்கள், நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த சர்வாதிகார அதிகார சக்தியை வன்மையாக எதிர்த்தன.
பின்திரும்பிப் பார்க்கும்போது, 2015ல் இடம்பெற்ற ஸ்ரீலங்காவின் தாராளவாத ஜனநாயக மாற்றம் மிகவும் நன்மையானது என்பது உண்மை, குறிப்பாக சர்வாதிகார ஜனரஞ்சக ஆட்சிகள் உலகெங்கிலும் படிப்படியாக எழுச்சிபெற்று வந்த சமயத்தில், திரு. ராஜபக்ஸ இரண்டு தவணைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிறைவேற்று ஜனாதிபதியின் பதவிக் காலத்துக்கான தடையை நீக்கியது உட்பட நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தினார், பின்னர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கும் குற்றவியல் பிரேரணையை தந்திரமாகக் கொண்டுவந்து நிறைவேற்றினார், அரசியல் சக்திகளின் ஒரு பரந்த அணியினரின் ஆதரவோடு ராஜபக்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சீனச் சார்பான ராஜபக்ஸவை வெளியேற்றியதன் மூலம் ஸ்ரீலங்காவுக்கு கிடைத்த ஜனநாயக வெற்றி, பதிலுக்கு மேற்கு, இந்தியா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஆறுதலையும் மற்றும் வெளிநாட்டு உறவுகளை ஒழுங்கமைக்கவும் உதவியது.
இப்படியான சூழலில் திரு. சிறிசேன, திரு ராஜபக்ஸவுடன் திரும்பவும் இணைந்து இந்து சமுத்திரத்தில் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா என்பன ஸ்ரீலங்காவில் தலையிட்டு அதிகார விளையாட்டினை மீள்பரிசீலனை செய்வதற்கு இடமளித்துள்ளார். இத்தகைய சோம்பேறித்தனமான முடிவு, நீண்டகால மற்றும் தவறான நவதாராண்மைக் கொள்கைகள் காரணமான அரசியல் விளைவுகளையும் மற்றும் அரசியல் - பொருளாதார மாற்றங்களையும் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. மேலும் அபிவிருத்திகளை குறுகிய பூகோள அரசியல் பூதக்கண்ணாடி வழியாகப் பார்க்கும் சர்வதேச ஊடகங்களின் வெறிக்கு தீனியும் போட்டுள்ளன, சிறிசேன - ராஜபக்ஸ முகாம் சொல்வது என்னவென்றால், பதவி நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கடந்த சில வருடங்களாக ஸ்ரீலங்காவின் சொத்துக்களை சீனா மற்றும் இந்தியாவுக்கு விற்பனை செய்ததோடு, சிங்கப்பூர் உடன் ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையையும் மேற்கொண்டுள்ளது, இது ஸ்ரீலங்காவின் இறையாண்மைக்கு குழி பறித்துள்ளதுடன் ஒரு பொருளாதார நெருக்கடியையும் தூண்டிவிட்டுள்ளது என்று.
சித்தாந்த ஆதாயங்கள்
சிறிது காலமாக ராஜபக்ஸ விசுவாசிகள் சர்வதேசத் தலையீடு ஏற்படலாம் என்கிற அச்சத்தை தூண்டி வருகின்றனர் - அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இந்த வெளிநாட்டு அச்சம் அணிதிரட்டப்பட்டு வருகிறது. 2015ல் சிறிசேன கோரிக்கை வைத்தது  தனது பிரதான சாதனை, 10 வருடகால ராஜபக்ஸவின் ஆட்சியினால் துண்டிக்கப்பட்டுள்ள உலகளாவிய உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதுதான் என்று. ஆனால் இன்றோ திரு.சிறிசேன  கடுமையான தேசியவாதிகளிடம் உரத்த குரலில் எதிரொலிப்பது சர்வதேச நிகழ்ச்சித் திட்டத்தில் இருந்து ஸ்ரீலங்காவை பாதுகாப்பது பற்றி.
ஐதேக மேற்கத்தைய நட்புறவில் ஏகபோக உரிமை பாராட்டுவதுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கொண்டு வருகிறது. திரு. ராஜபக்ஸ திரும்பவும் வருவாரானால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப் படுவதுடன் வெளிநாட்டு உதவிகளும் நிறுத்தப்படும் என்று ஒரு தோற்றத்துக்கு அது வர்ணம் தீட்டி வருகிறது, ஆனால் அதன் சொந்தக் கொள்கைகள் நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறது என்பதை அது பிரதிபலிக்கவில்லை.
இந்தப் போக்கு தமிழ் அரசியலில் வித்தியாசமாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள குறுகிய நோக்குடைய தமிழ் தேசியவாதிகள் மற்றும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் மேற்குக்கு விரோதமான அரசாங்கத்தின் தோற்றம், சர்வதேசத்தின் கண்டனம் அணிதிரள்வதற்கான ஒரு வாய்ப்பு என்று கருதுகிறார்கள். அவர்கள் உள்நாட்டு யதார்த்தங்கள் மற்றும் அரசியல் இயக்கவியல் என்பனவற்றைப் புறக்கணித்து வெளிநாட்டு தலையீடு ஏற்படும் என்று தொடர்ந்து கனவு காண்கிறார்கள்.
இந்த வெளிநாட்டுத் தலையீடு பற்றிய அச்சம் மற்றும் வெளிநாட்டு ஆதரவு பற்றிய நம்பிக்கை என்பன சித்தாந்த சூழ்ச்சிக்கு அதிகம் வழிவகுக்கின்றன. உண்மையில், தேசிய அரசியல், அதிகார ஒருங்கிணைப்பு மற்றும் வெளிநாட்டவர்களுடன் பேச்சுவார்த்தை என்பனதான் ஸ்ரீலங்காவின் சர்வதேச உறவுகளைத் தீர்மானிக்கின்றன.
வெளிநாட்டு சக்திகள் பற்றிய ஸ்ரீலங்காவின் பதட்டம் - 1980ன் இந்திய தோல்வியைத் தவிர - அபூர்வமாகவே தண்டனை நடவடிக்கைகள் மற்றும் சேதம் உண்டாக்கும் பொருளாதாரத் தடைகளுக்கு வழி வகுக்கும். இருப்பினும் மோதல்போக்கான சொல்லாட்சி வெகுஜனங்களின் ஆதரவை அணிதிரட்டுவதற்கு தேசியவாத அரசாங்கங்களுக்கு உதவும்.
சர்வதேச அழுத்தங்கள்.
ஒரு தசாப்தமாக தொடரும் நாட்டின் யுத்தகால துஷ்பிரயோகங்கள் பற்றிய நடவடிக்கை ஐநா மனித உரிமைகள் பேரவையில் உள்ள ஒரு வழக்கு என்பது சுட்டிக்காட்டத் தக்கது. சீனா மற்றும் ஈரான் என்பனவற்றின் பக்கச்சார்பான திரு. ராஜபக்ஸவை சிக்கவைப்பதற்கு அமெரிக்கா பிரேரணைகளை கொண்டுவந்தபோது, அவர் ஜெனிவாவில் அரசியல் ரீதியாகப் பெற்ற கண்டனங்கள், உள்நாட்டில், சர்வதேச மிரட்டல்களுக்கு அஞ்சாமல் யுத்த வீரர்களைப் பாதுகாக்கிறார் என்கிற பெயரைப் பெறுவதற்கு அவருக்கு உதவியது. ஸ்ரீலங்காவின் சீரழிவுக்கு கொடுப்பனவுகளின் மீதி மற்றும் வெளிநாட்டுக் கடன் பிரச்சினைகள் என்பனவும் கூட ஏற்புடைய காரணிகள் ஆகும். அதேவேளை சீனாவின் கடன் பொறி பற்றி அதிகம் பேசப்படுகிறது, உண்மையில் ஸ்ரீலங்காவின் வெளிநாட்டுக் கடன்களில் சீனாவின் பங்கு 10 விகிதம் மட்டுமே.
இறையான்மை கடன் பத்திரங்கள் உட்பட 40 விகிதத்துக்கு கிட்டவான வெளிநாட்டுக் கடன்கள்,  சர்வதேசச் சந்தையில் இருந்து பெறப்பட்டவை ஆகும், இவற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் கொடுப்பனவுகள் அடுத்த வருடம் கொடுக்க வேண்டியவை ஆகும். சர்வதேச நாணய நிதியம் 2016ம் ஆண்டு ஸ்ரீலங்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை காரணமாக அதன் நிலைப்பாடு மற்றும் ஸ்ரீலங்கா மீதான மதிப்பீட்டு முகவர்களின் அழுத்தங்கள் என்பன கடன் நெருக்கடிகளை உயர்த்துவதற்கான முக்கிய காரணிகள் ஆகும். இறுதியாக, அத்தகைய முதலீடுகளின் பாய்ச்சல்கள் இராஜதந்திர உறவுகளுடன் தொடர்பற்றவை, ஆனால் தேசிய ஸ்திரத்தன்மை, வலிமை, வரவு செலவு திட்ட வெட்டுக்கள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் என்பனவற்றை உறுதிப்படுத்துதல் உட்படவுள்ள அரசியல் விருப்பம் என்பனவற்றில் தங்கியுள்ளன.
முந்திய தடவை அதிகாரத்தில் இருந்தபோது திரு.ராஜபக்ஸ ஒரு கொடூரமான யுத்தத்தின் பின்னர் சர்வதேச பொருளாதார தனிமைப் படுத்துதலை முரட்டுத்தனம் என அழைத்தார். மேற்கத்தைய எதிர்ப்புகளுக்கு மாறாக சர்வாதிகார ஸ்திரத்தன்மையுடன் செயற்பட்டார், உலக சந்தை மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறுவது போன்றவற்றில் சிறிது பிரச்சினைகள் அவருக்கு இருந்தன, மற்றும் அந்த விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் உதவிக்கு வந்தது.
நவ தாராளவாத நெருக்கடி
ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்துக்கு உலகளாவிய சக்திகளின் எதிர்ப்பு இல்லை. எனினும் எந்தவொரு உலகளாவிய சக்தியின்  கருவியின் நகர்வுக்கு மாறாக தீவு தேசத்துக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் அது உலகளாவிய பொருளாதார ஒழுங்குகளுக்கு ஏற்ப மாற்றமடைகிறது. அதிகரித்து வரும் பாதுகாப்பு காரணங்களினால் சரிவடையும் உலகளாவிய வர்த்தகம் காரணமாக ஏற்றுமதி தொடர்பான  முன்னேற்றங்கள் முடக்கப்படும்; சாத்தியம் உள்ளது, மற்றும் இந்த யதார்த்தம் ஐதேக வின் கீழ் இருந்தாலும் சரி முன்னர் ராஜபக்சவின் கீழ் இருந்தாலும் சரி நவ தாராளவாத கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து முற்றாகத் தப்பிவிட்டது.
அடுத்ததாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் எனப்படும் மத்திய வங்கி சில வருடங்களாக வளரும் சந்தைகளில் இருந்து மேற்கத்தைய முதலீடுகள் பெரு நகரங்களுக்குத் திரும்புவதன் காரணமாக மூலதனம் பறப்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் படாததின் விளைவாக  வட்டி விகிதத்தை அதிகரிக்கத் தயாராகி வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் பொருளாதார நிலமைகள் சீரழிந்ததின் காரணமாக அரசியல் பிரச்சினைகள் அதிகரித்தன என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. உண்மையில் கொடுப்பனவுகள் மீதி பற்றிய பிரச்சினைகள் அதிகரித்ததின் காரணமாகவே இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் - ஸ்ரீலங்காவின் பொருளாதார நிறுவனங்களுக்கு தடைவிதிப்பு - என்பன உண்டானது, மற்றும் மூலதனப் பாய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவதைப் பற்றிக்கூட ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டன. ஒருமுறை பொருளாதார நெருக்கடி அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, குறிப்பாக நீண்டகால வரட்சியான சூழ்நிலையின்போது, கிராமப்புற பொருளாதாரத்தைப் புறக்கணித்தது தொடர்பாக நீண்ட காலமாக புகையும் கவலைகள் முன்கொண்டு வரப்பட்டன. விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தைக் கட்டுப்படுத்தவது, எரிபொருளின்  சந்தை விலையைத் தீர்மானிக்கும்; கொள்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற அரசியல் வீழ்ச்சிகள் அரசாங்கத்தைச் சட்டபூர்வமற்றதாக்கின.
சர்வாதிகார ஜனரஞ்சகம்
நவதாராளவாதத்துக்கு எதிரான பின்னடைவு 2008 உலகளாவிய பொருளாதார நெருக்கடியுடன் முன்னோக்கி வந்ததுடன், உலகளாவிய அரசியலை சரி செய்வதற்கு சர்வாதிகார ஜனரஞ்சக ஆட்சிகள் எழுச்சி பெற்றது ஸ்ரீலங்காவையும் பாதிப்புக்கு உட்படுத்தியது. திரு. மகிந்த ராஜபக்ஸ போன்ற வலிமையான மனிதத் தலைவர் அபாயகரமான எழுச்சி பெற்றதின் காரணமாக வெளிச் சக்திகளின் சூழ்ச்சிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. மாறாக ராஜபக்ஸவின் பிரபலமான முறையிலான அரசியல் நிலைப்பாடு, நவ தாராளவாத நெருக்கடிகளின் சுழற்சிகளினால் மக்களை முறையாக இடஒதுக்கீடு செய்வதின் மூலம் வடிவமைக்கப்பட்டது.
அதே வேளை வர்த்தக தாரளமயமாக்கல், மருத்துவக் கல்வியை தனியார்மயப்படுத்தல், இறையாண்மைப் பத்திரங்களை விற்பனை செய்தல் மற்றும் கொழு;பில் அமையவுள்ள சர்ச்சைக்குரிய துறைமுக நகரம் மற்றும் சர்வதேச நிதி மையம் உட்பட, ஸ்ரீலங்காவின் அநேகமான நவ தாராளவாதக் கொள்கைகள் ராஜபக்ஸ அரசாங்கத்தின் உற்பத்திகளே ஆகும், இன்று ராஜபக்ஸ முகாம் இறையாண்மை மீது நவதாராளவாதம் மேற்கொள்ளும்; தாக்குதலில் இருந்து ஸ்ரீலங்காவைக் காப்பாற்றும்படி கோரிக்கை வைக்கிறார்கள். அதேவேளை திரு.விக்கிரமசிங்கா சுதந்திரச் சந்தை மற்றும் நிதி முதலீடு போன்ற அதே பொருள்கொண்ட பல்வேறு வடிவங்களிலான திரு. ராஜபக்ஸவின் பொருளாதாரக் கண்ணோட்டத்தை மேம்படுத்த முயற்சிப்பது வெட்கம் கெட்ட செயல்.
இவை ஜனநாயகப் பார்வையுள்ள நம்பகரமான பொருளாதார மாற்றீடுகள், அவை ஜனரஞ்சக சர்வாதிகாரத்தை நோக்கிய சாய்வைத் தடுத்து நிறுத்தும். இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நலன்களின் பரவலான சொற்பொழிவுகள் அத்தகைய மாற்றீடுகளைத் திசை திருப்பி விட்டன. ஐதேக மற்றும் அதன் கூட்டணி என்பனவற்றை அவற்றின் பொருளாதாரப் பெருந்தவறுகளுக்காகவும் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நீக்குவது உட்பட அரசியலமைப்பு ரீதியான ஒரு அரசியல் தீர்வு காணப்படாததுக்காக சவாலுக்கு உட்படுத்த வேண்டும். சிறிசேன - ராஜபக்ஸ கூட்டணி; யுத்த வெற்றி மற்றும் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் அணிதிரட்டலுடன்கூடிய சர்வதேசச்சதி என்பனவற்றை வைத்து திரும்பவும் இயங்குவதற்கான வாய்ப்பு உள்ளது, ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் பன்மைத்தன்மை என்பனவற்றை அடிப்படையாக வைத்து இவர்களையும் சவாலுக்கு உட்படுத்த வேண்டும். ஸ்ரீலங்காவில் விவாதமானது தனிநபர்களுக்;கு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது, ஊழல் மற்றும் பூகோள அரசியல் தேவைகள் என்பனவற்றையும் ஜனநாயக மாற்றம்; மற்றும் பொருளாதார நீதி போன்ற சக்திவாய்ந்த கோரிக்கைகளை பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும். இல்லையெனில் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் எனபனவற்றால்; வழங்கப்படும் பாதுகாப்பு என்கிற மெல்லிய சுவர் உடைந்து சிதறிவிடும், மற்றும் ஆழமாகும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்பன சர்வாதிகார ஒருங்கிணைப்புக்கு வழிவகுத்துவிடும்.
(அகிலன் கதிர்காமர் ஸ்ரீலங்கா, யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டியங்கும் ஒரு அரசியல் பொருளாதார நிபுணர் ஆவார்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

03 October 2018

ரஜனியின் கேள்விகளுக்கு தமிழ் உயரடுக்கினர் பதில் கூற மறுத்துவிட்டார்கள்- ராஜன் ஹ-ல்


மழைக்காலமும் முன்னிருட்டும் வருடம் முடியப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகளாக உள்ளன. வயல்கள் உழுது பண்படுத்தப்பட்டு விதைத்து  பூமியின் புதுப்பித்தலுக்காகவும் மற்றும் தாராள விளைச்சலுக்காகவும் தயாராக இருக்கின்றன. அப்படியான ஒரு நேரத்தில்தான் இருபத்தொன்பது வருடங்களுக்கு முன்பு ரஜனி திரணகம எல்.ரீ.ரீ. இனால் கொல்லப்பட்டார். அவரது கேள்விகளும் மற்றும் உண்மையை பிரதிபலிக்கும் மொழிகளும் பெரும்பாலும் அடிப்படையில் நமது ஊகங்களுக்குச் சவால்விடுத்தன. 1988 ஒக்ரோபரில் அவரால் எழுதப்பட்ட மாயைகளை ஒதுக்கித் தள்ளுதல் எனும் கீழ்காணும் மேல்முறையீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொது அறையில் வைத்து 50 கல்வியாளர்களால் கையெழுத்திடப்பட்டது.

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களுக்கு இடையே உள்ள எமது உறவுகளை மட்டுமல்ல ஆனால் எங்களைப் பற்றியும் நாங்கள் ஆராய வேண்டும். சமூகத்தினிடையே உள்ள பயங்கரவாதத்துக்குத் தலை வணங்குதல், நமது சந்தர்ப்பவாதம் மற்றும் பல உள்ளகக் கொலைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையில் கொள்கைகளின் பற்றாக்குறை, என்பன வெளிச்சக்திகள் அதே ஆயுதங்களைப் பயன்படுத்தி எங்களைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்கியுள்ளன. சமூகத்தினுள்ளேயே ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கும்போது, ஜனநாயகத்துக்கான எங்கள் வேண்டுகோள் அர்த்தமற்ற ஒரு நடவடிக்கையாக மாறிவிடுகிறது. அரசியல் சக்திகளை விமர்சித்து குரலெழுப்பும் பல தனி நபர்கள் மற்றும் இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இங்கிருந்து அகற்றப்பட்டு அல்லது கொல்லப்பட்டுவிடுகிறார்கள்.
பல்கலைக்கழகத்தின் தொடக்கம் முதலே அதே பொது அறையில்; எங்களது மறைந்த கல்வியாளர்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் ரஜனியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டிருப்பதைப்பற்றி பல வருடங்களாக அங்கு வரும் வருகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்;. 2014ல் பல்கலைக்கழக அதிகாரிகள் (பின்னோக்கிப் பார்த்ததில் பல்கலைக்கழக உப வேந்தரை மட்டும் தனியாகக் குறிப்பிடுவது தவறு என்று நான் நினைக்கிறேன்) ரஜனியின் கொலையின் 25 வது ஆண்டு நிறைவை நினைவு கூருவதை கடிவாளம் இட்டுத் தடுத்தார்கள். ஒரு நேர அட்டவணையின்படி அவர் பரீட்சைகளை நடத்தியது கொலையாளிகளுக்கு அவரது கொலையை திட்டம்தீட்டுவதை எளிதாக்கியது.
குறுகிய சிறிது கால இடைவெளியில் இதே பொது அறையில், தலைவர் ஒரு அரசியல் பரிசைக் கைப்பற்றுவதற்காக அவரது வற்புறுத்தலின் கீழ் காந்திய வழியில் சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த எல்.ரீ.ரீ. யின் திலீபனின் 31வது ஆண்டு நிறைவு ஒரு தியாகத் திருவிழாவாக பெரும் வைபவமாகக் கொண்டாடப்பட்டது, அதற்கு உப வேந்தரே முன்னின்று உழைத்தார். சிறிது நாட்களின் பின் எல்.ரீ.ரீ. இனால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது, அதிலும் வழக்கம்போல மூத்த பல்கலைக்கழக அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தார்கள்.
அதன் விளைவு மிகை யதார்த்தம் ஆகும். இந்த நடவடிக்கைகள் யாவும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் கண்களின் கீழேயே நடைபெற்றன, இதே பாதுகாப்பு படைகள் 2014ல் மருத்துவ மாணவர்கள் சங்கம் ரஜனியின் மரணத்தை நினைவு கூருவதை, பீடாதிபதிக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து நிறுத்தினார்கள்.
மிருகத்தனமான  தீவிரம் நிறைந்த தமிழ் தேசியவாதத்தை மகிமைப்படுத்தும் தற்போதைய விழாக்களில் முக்கியமாகக் கலந்து சிறப்பிக்கும் அதே பல்கலைக்கழக அதிகாரிகள், கொழும்பில் உள்ள அதிகார சக்திகளைக் கையாளும்போது வித்தியாசமான வேறு முகத்தைக் காட்டுகிறார்கள், இப்பேர்பட்டவர்களின் சகிப்புத் தன்மையினால் பல்கலைக்கழகத்தின் பிற்போக்கான சிதைவு நிலை தொடர்கிறது. ஒரு நெருக்கமான பாரம்பரியத்தை வலுப்படுத்துவதற்காக நன்கு தகுதி பெற்ற கல்வியாளர்களை வெளியேற்றிவிட்டு, பொங்கு தமிழ் மற்றும் அதன் வீர வழிபாடு என்பனவற்றை வைத்துக்கொண்டிருக்கிறது இதன் காரணமாக எங்கள் வரலாற்றின் மிகவும் நெருக்கமானதும் வருந்தத்தக்கதுமான அம்சங்கள் வதந்தி நிலைக்கு கீழிறங்கியுள்ளன. ரஜனி ஏன் வெறுக்கப்படுகிறார் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்
1982ல் ரஜனி ஒரு மருத்துவராகக் கடமையாற்;றிய வேளையில், வேறு யாரும் விருப்பமில்லாமல் இருந்தபோது, எல்.ரீ.ரீ, தலைவரின் விருப்பத்துக்குரிய ஒருவராக இருந்த சீலன், தவறுதலான ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக இரவு நேரத்தில் சென்றார் (முறிந்த பனைமரம் என்ற நூலைப் பார்க்க). சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் வைத்து, அந்த இயக்கத்தின் உள்ளக மிருகத்தனம் மற்றும் சகிப்புத் தன்மையற்ற நிலை என்பனவற்றையும் மற்றும் சீலன் எவ்வாறு ஒரு கொலை வெறிக்குத் தூண்டப்பட்டார் என்பதையும் அவர் அறிந்து கொண்டதும், சீலனது செயற்பாட்டுக்காக கசப்புடன் வருத்தமடைந்தார்: குறிப்பாக புளொட் இயக்க சுந்தரத்தை அவரது தலைவரின் கட்டளைப்படி கொலை செய்ததுக்காக (அவரும் என்னைப் போன்ற ஒரு சுதந்திரப் போராளி). சீலன் தென்மராட்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட முகாமில் தங்கியிருந்தபோது, அங்கிருந்து வெளியேறும்படி அவசர அழைப்புகள் வந்தபோதிலும் அதற்கு மாறாக ஜூலை 1983ல் முகாம் இராணுவத்தின்  திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.
எல்.ரீ.ரீ. க்கு உதவி செய்யும் ரஜனியின் ஆர்வம் 1986ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு திரும்பவும் சென்று தனது செயல்பாட்டின் மூலம் சவால் விடுவது என்கிற தீர்மானமாக உருவெடுத்தது. இயக்கத்தில் இருந்து முறித்துக்கொண்ட பின்னர் இயக்கத்தின் மனித நேயமற்ற கலாச்சாரம் காரணமாக எத்தனை இளைஞர்கள் இறந்துபோனார்கள், எங்கள் சிடுமூஞ்சிகளான உயரடுக்கினரால் அவர்கள் மாவீரர்களாக மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள். ரஜனியின் மரபியலின் முரண்பாடு மற்றும் அச்சம் என்பன திரும்பவும் நலிந்த தரத்தினரான தமிழ் உயரடுக்கினர்மீது அன்பு கொள்ள வைத்தது. அவரது வாழ்க்கை மற்றும் அனுபவம் என்பன, எங்கள் வாழ்க்கை மற்றும் உணர்ச்சிகள் காரணமாக அழிவுற்ற ஒரு மலிவான வரலாற்று சகாப்தத்தை தூய்மைப் படுத்துவதற்காக வேண்டி போராட்டம் நடத்தின.
கல்வியைப் பொறுத்தவரை, யுத்தத்துக்குப் பின்னான ஒரு முன்னுரிமையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பார்வையை மேம்படுத்துவதுடன் மதச்சார்பற்ற மரபுகளை வலுப்படுத்தி மற்றும் உலகெங்கிலும் உள்ள கல்விமான்களின் சுதந்திரமான இயக்கத்தை ஊக்குவிப்பதாகவும் இருக்கவேண்டும். ஆனால் இன்று அதற்கு மாறாக மத மற்றும் அரசியல் பிரிவினைவாதம் என்பன பல பல்கலைக்கழகங்களில்  அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனம் மிக்க கனிவான உற்சாகத்துடன் எம்மை முகத்துக்கு நேரே வெறித்துப் பார்க்கின்றன.
ஒரு அரசியல் தீர்வு எழுபது வருடமாகக் காத்துக்கிடக்கிறது ஒருவேளை இன்னும் ஒரு எழுபது வருடங்கள் அதற்காகக் காத்திருக்க வேண்டி ஏற்படலாம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிறக்கம் சாத்தியமான சமூகமாக எஞ்சியுள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்தை உண்டுபண்ணும். என்னுடைய தீர்ப்பின்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மிகப் பெரிய தவறு இலகுவாகத் திருத்தப்படலாம். அது திரும்பவும் தமிழ் தேசியவாதத்தின் பிறப்பிடத்துக்கும் மற்றும் பதில் சொல்லப்படாத ரஜனியின் கேள்விகளுக்கும் செல்கிறது.
இதே கேள்விகள்தான் இளம் தமிழ் ஊடகவியலாளரான ஜூட் ரத்னம் என்பவர் தயாரித்து சர்வதேச ரீதியான பாராட்டுக்களைப் பெற்ற சொர்க்கத்தில் பேய்கள் எனும் ஆவணப்படத்திலும் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான பிரதிபலிப்பை வசதியான தமிழ் இளைஞர்கள் சிலர் பிபிசி யில் வெளிப்படுத்தியிருந்தார்கள். தமிழர்கள் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட விடயத்தில் குருடாக இருந்ததுக்காக ஜூட் மீது குற்றம் சொல்ல முடியாது, ஆனால் அவரது படைப்பினைப் பற்றிய பிரதான விமர்சனம், தமிழ் கலாச்சாரத்தின் மிருகத்தனமான செயல்களை ஆராய்ந்து அதைப் படுகுழியில் தள்ளிவிடுவதற்கு மேற்கொள்ளும் எந்த முயற்சிக்கும் முன்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என நாங்கள் கருதுகிறோம், இல்லாவிடில் இது எங்கள் மனதைத் திறந்து உலகமும் அதன் பாரம்பரியமும் வழங்கவுள்ளதைக் காண அனுமதிக்காது.
சமூகத்தின் நிலை உண்மையில் பிசாசுக்கு ஒப்பாக இருக்கலாம். இந்த நிகழ்வுக்கு பல்கலைக்கழகம் ஒரு மையமாக இல்லை. அது தமிழ் உயரடுக்கினருடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட போலி உபகாரச்சம்பளம் எனும் உலகளாவிய ஒரு வலையமைப்பால் ஆதரிக்கப்படுகிறது. எங்களது உள்ளகச் சிதைவுகளுன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் கொடூரங்கள் இரண்டாம் நிலையிலேயே உள்ளன, மற்றும் முக்கியமாக  புலிகளின் கொடூரங்கள் மற்றும் சகிப்புத்தன்மையற்ற நிலை என்பன தமிழ் உயரடுக்கினரின் பாராளுமன்ற அரசியலின் திவால்தன்மையின் விளைவுகள் ஆகும் என்று ரஜனி குறிப்பிட்டுள்ளார். இது விவாதங்கள் மற்றும் இணைய உலா போன்ற சௌகரியமான சூழலில் இருந்து அவருக்கு கிடைத்தது அல்ல, இது எல்.ரீ.ரீ.ஈக்கு உதவுவதற்காக அவர் மேற்கொண்ட உயர்ந்த தியாகங்களில் இருந்து ஆரம்பமானது.
தமிழ் தேசியவாதம்: திசை மாற்றம் மற்றும் ஆபத்தான காட்டிக்கொடுப்பு
தமிழ் தேசியவாத அரசியல் மற்றும் பிரபாகரனை மகிமைப்படுத்துதல் என்பனவற்றை எல்.ரீ.ரீ. இனது பாரம்பரியத்தில் இருந்து வேறுபடுத்தும் முயற்சியில் இன்று நாங்கள் நேரத்தைச் செலவிடவேண்டிய அவசியம் இல்லை. எல்லாவற்றிலும் மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (பெடரல் கட்சி), தமிழ் தேசிய மக்கள் முன்னணி(தமிழ் காங்கிரஸ்), முதலமைச்சர் விக்னேஸ்வரன், பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் பிரதான நீரோட்டத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் என்பன இந்த மரபுரிமையைக் கைப்பற்றுவதற்காகப் போட்டிபோடுகின்றன. சிங்களத் தலைமைகளில் நம்பிக்கையிழந்த செல்வநாயகம், உரும்பராயிலுள்ள சிவகுமாரனின் சிலைக்கு மாலையணிவித்ததின் மூலம் போர்க்குணத்தின் ஆரம்பத்தை ஆசீர்வதித்தார் என்றும் ஆகையினால் அதன்படி பிரபாகரன் இரட்சகராக ஆனார் என்றும் போலியான ஒரு தர்க்க வாதம் தற்போது நடப்பிலுள்ளது. ரஜனி தனது முறிந்த பனைமரம் நூலில் இந்த வாதங்களின் அடிப்படையையே குப்பையில் போட்டுள்ளார்.
சிங்கள தேசியவாதத்தை ஒரு அரசியல் சக்தியாக எடுத்துக்கொண்டால் அதன் பிரதான ஆசிரியர்கள் உருமாற்றமடைந்த இலங்கை தேசிய காங்கிரஸின் சேனநாயக்கா மற்றும் சிங்கள மகா சபையை சேர்ந்த பண்டாரநாயக்கா ஆகியோராவர். 1930 களில் அவர்கள் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை மறுப்பதற்காக வெளிப்படையாகக் காட்சிகளைச் சித்தரித்து ஒருவருக்கொருவர் கடும் போட்டியிட்டார்கள். ஆளுனர் கல்டிகொட்டின் கருணையினால் 1941 முதல் தேர்தலை நடத்தாமல் அவர் 1946 வரை அதிகாரத்தில் இருந்தார், 1930 களின் ஆரம்பத்தில் இருந்து இடதுசாரிகளின் மெதுவான முன்னேற்றத்துக்குப் பின்னர் தேர்தல் வரைபடம் மாற்றப்பட்டதை அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள். இதன்படி இரண்டு போட்டியாளர்களும் சிங்களவர்களின் வாக்குகள் பிளவுபடக் கூடாது என்கிற காரணத்துக்காக ஐதேக வினை உருவாக்கினார்கள்.
1947 பாராளுமன்றத் தேர்தல்கள் ஒரு சிறுபான்மை ஐதேக அரசாங்கத்தை கொண்டுவந்தது, மொத்தமுள்ள போட்டியிடும் 95 தொகுதிகளில் அது 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது, 4 ஆங்கிலேயர்களையும் மற்றும் 1 பறங்கியரையும் கொண்ட 5 நியமன உறுப்பினர்களின் ஆதரவு தவிர, இடதுசாரிகளில் பிளவு பட்டவர்கள் மற்றும் பிரித்தானியர்களின் ஆதரவு என்பன பின்புலத்தில் கிடைத்திருக்காவிட்டால்; அதனால் உயிர்வாழ்ந்திருக்க முடியாது. 1948ல் சுதந்திரம் பெற்றதின் பின்னர் அதன் பலவீனமான பிணைப்பை ஒருங்கிணைத்துக்கொள்ளும் வகையில் இரண்டு பெரிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன, அவை  ஜூன்மாதம் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் விரோத  தொழிற் சங்கங்கள் (திருத்த) மசோதா மற்றும் ஆகஸ்ட் மாதம்  தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்ட மசோதா என்பனவாகும்.
இந்த மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவது, தமிழ் காங்கிரஸில் உள்ள ஏழு பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஆதரவை அரசாங்கம் பெற்றுக்கொள்வதில்தான் தங்கியுள்ளது என்பதை சேனநாயக்கா உணர்ந்திருந்தார். ஒரு அமைச்சவைப் பதவி தருவதாகத் தூண்டில் வீசப்பட்டதும் ஜி.ஜி.பொன்னம்பலம் அதில் மாட்டிக்கொண்டார். அந்த பெரிய பரிசுக்குரிய சோதனை ஓட்டமாக  தொழிற் சங்கங்கள் மசோதா பரீட்சிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்தது பிரித்தானியாவில் உள்ள நடைமுறையைப் மாற்றுவதன் மூலம் தொழிற் சங்கங்களை பலீவீனமாக்கும் செயல். 1927 பிரித்தானியச்சட்டம் அரசாங்க ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. 1935ம் ஆண்டின் இலங்கைச் சட்டம் பிரித்தானியச் சட்டத்தைப் பின்பற்றியது. 1946ல் தொழிற்கட்சி அரசாங்கம் 1927 பிரித்தானியச் சட்டத்தை ரத்து செய்தது.1948ல் இலங்கை அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தின் மூலம் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இணைப்பை மேலும் இறுக்கமாக்கியது.
இதற்கான விவாதத்தில் தனது முடிவுரையாக ஜி.ஜி பொன்னம்பலம் பின்வருமாறு தெரிவித்தார், கூட்டு அரசியல் குறிக்கோள்கள் வழங்கப்பட்டால், அவை விரும்பியோ அல்லது விரும்பாமலோ இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஏற்படுவதற்கான ஒரு கருவியாக அமைந்துவிடும் என்பதற்கான சாத்தியங்களைப் பற்றிச் சிந்திக்கவே எனக்கு நடுக்கமாக உள்ளது. அது கம்யுனிச எச்சரிக்கைக்கான அழைப்பாகும், தொழிற் சங்கங்கள் மசோதாவில் செல்வநாயகம் உட்பட தமிழ்காங்கிரஸ் அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்தது. அதுதான் செல்வநாயகத்தின் முதலாவதும் பெரியதுமான அரசியல் தவறு. செனட் சபையில் அந்த மசோதாவை தீவிரமாக எதிர்த்த இரண்டு தமிழர்கள் சோமசுந்தரம் நடேசன் மற்றும் .எம்.வி நாகநாதன் ஆகியோர். எந்தக் காலத்திலும் }னமும் அனுதாபமும் உள்ள சிங்கள பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு எதிராக தமிழ் காங்கிரஸ் தன்னை விலக்கிக்கொண்டதால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளமானவை. குடியுரிமை சட்ட மசோதாவில் பொன்னம்பலத்தின் கீழ்படிவினைப் பரீட்சித்த பின்னர் சேனநாயக்கா அவருக்கு மந்திரிப் பதவியை வழங்கினார்.
குடியுரிமைச்சட்ட மசோதா (20 ஆகஸ்ட்) வில் தனது அரசியல் பெயரைக் காப்பாற்றுவதற்காக பொன்னம்பலம் முறையற்றவிதத்தில் வாக்களித்தவர்களின் பெயர்ப்பட்டியலை ஹன்சார்ட்டில் பிரசுரிக்கப்படாமல் பாதுகாத்தார் என்று பதிவுகள் தெரிவிக்கின்றன. விவாத மன்றில் இருந்து தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மனச்சாட்சி இடம் கொடுக்காததால் செல்வநாயகம் அந்த அணியில் இருந்து பிரிந்து குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிராகப் பேசியதுடன் அதற்கு எதிராகவும் வாக்களித்தார். அமைதியாக இருந்தாலும், செல்வநாகத்துடன் சேரவோ மற்றும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவோ சிரமமாக இருப்பதை பொன்னம்பலம் உணர்ந்தார். அந்த மசோதா ஆதரவாக 53 வாக்குகளும் மற்றும் எதிராக 35 வாக்குகளும் பெற்று நிறைவேறியது. எதிராக 40 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் சபைக்கு வரவில்லை. துணிவான ஊடகவியலாளர் ஒருவர், ஆகஸ்ட் 21ல் எவ்வாறு வாக்களிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தியிருந்தார். செனட் சபையில் நடேசன் மற்றும் நாகநாதன் ஆகியோர் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார்கள். செப்ரம்பர் 2ல் பொன்னம்பலம் அமைச்சராக்கப்பட்டார்.
குடியுரிமைச்சட்டம் சிறுபான்மையினர் மேல் விழுந்த பலத்த அடியாகும், தமிழ் காங்கிரஸ் தீர்மானிக்கப்பட்ட எதிர்ப்பைக் காட்டியதால், ஒன்றில் அதை நிறுத்துவதோ அல்லது தொடர்ந்து முன்னெடுப்பதோ அரசாங்கத்துக்கு செலவு மிக்கதாக இருந்தது. தான் அவர்களுக்காக நிற்கப் போவதாக மலையகத் தமிழர்களுக்கு வாக்குறுதி வழங்கிய பின்னர், பொன்னம்பலம் அவரது சக்தி மிக்க வாதத்திறமை கொண்டு ஒருவார்த்தைகூட அவர்களுக்காக  உச்சரிக்கவில்லை.; சிறுபான்மையினரின் எதிர்காலம் ஆபத்திலுள்ளது என்கிற செய்தி தமிழ் காங்கிரசினால் உரத்து தெளிவாக தெரிவிக்கப் பட்டதால், அமைச்சர்களான சுந்தரலிங்கம் மற்றும் சிற்றம்பலம் உட்பட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த தமிழர்களும் மற்றும் முஸ்லிம்களும் அது ஒரு விலையுயுர்ந்த செயல் என்பதைக் கண்டார்கள். எல்லாவற்றையும் விட, ஒரு பலவீனமான அரசாங்கம் மசோதாவுக்கு ஆதரவு உறுதிப்படுத்துவதற்காக சலுகைகளை விற்பனை செய்தது. நியமன அங்கத்தவர்களிடம்  நிலையான ஆதரவை வழங்கும்படி உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கலாம்.
தோட்டப்பகுதி தமிழர்கள், அதன்படி சிறுபான்மையினர் மீதான இந்தக் காடடிக்கொடுப்பின்போது, அரசாங்க சேவையில் உள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்துடன் இணைவது நல்லது என்று பார்க்கப்பட்ட அந்த வேளையில் அது தொடர்பாக அநேக தமிழர்களின் பெயர்கள் பொன்னம்பலத்தால் வலியுறத்தப்பட்டன. அவர்களில் சிலர் செனட்டர் .ஜே. ராஜநாயகம் மற்றும் செல்லப்பா குமாரசாமி ஆகியோராவர். செல்வநாயகத்தின் சுயசரிதம் பற்றி எழுதிய .ஜே.வில்சன், தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று விரும்பிய முக்கிய தமிழர்கள் பலரின் பெயர்களை அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தமிழர்களின் மத்தியில் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஹன்டி பேரின்பநாயகம் மற்றும் கே.நேசையா ஆகியோரும் இருந்தனர், டொனமூர் சகாப்தத்தில் மலையகத் தமிழர்களின் கதி ஒரு முன்னணிப் பிரச்சினையாக இருந்த போதிலும் அது பெருமளவில் மௌனமாகவே விடப்பட்டதாகவே தோன்றியது.
தனது சொந்த வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் உயரடுக்கினரின் பொய்முகங்களுக்கு மாறாக செல்வநாயகம் மலையகத் தமிழர்களின் பக்கம் நின்றது அவரது பெருந்தன்மையை எடுத்துக்காட்டியது. நாகநாதன் மற்றும் அறிஞரான நடேசன் ஆகியோரின் பின்துணை இல்லாதிருப்பின் அவர் பெரிதும் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவராக இருந்திருப்பார். இவர்கள் மூவரிடையேயும் இருந்த உறவு வெளியே தெரியாத ஒரு பகுதியாக இருந்தது. தமிழ் தலைமை பரிதாபகரமாக தோல்வியடைந்த அந்தக் கட்டத்தில், செல்வநாயகம் ஏன் போராட்டத்தை தனது கைகளில் எடுத்துக்கொண்டு முன்னேறத் தவறினார் என்பதற்கான விளக்கம் தேவைப்படுகிறது.
இப்படியாகத் தமிழர்கள் பெரிதுபடுத்தப்பட்ட முக்கியமான உணர்வுகளுக்காக அவர்களது சொந்த உயரடுக்குத் தமிழர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். அதை விழுங்கிக் கொள்வது கடினம் மற்றும் எங்கள் இழப்புகளுக்கு காரணம் துரோகிகள் எனக் கண்டறிந்ததால், பிசாசுக்கு ஒப்பான சதிகளையும் மற்றும் சிதைந்துபோகும் சித்திரவதைக் கொலைகளில் ஏற்படும் தவறான திருப்தியையும் எங்களுக்கு விட்டுச் சென்றனர். ஸ்ரீலங்காப் படைகளின் மிகப்பெரிய மீறல்களைப் பற்றி நாட்டின் நலன்களுக்காக ஒரு முழுதான மற்றும் நம்பகமான ஒரு நீதி விசாரணை தேவைப்படுகிறது, ஆனால் தெரிந்து கொண்டே போரை ஆரம்பித்தவர்கள்தான் முதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது நினைவிலிருக்கட்டும். இந்த நாட்டில் 1987 ஒக்ரோபர் முதல் அனைத்து யுத்தங்களும் தேவையில்லாமால் கட்டுப்பாட்டை தம்வசம் வைத்திருப்பதற்காக எல்.ரீ.ரீ. இனால் ஆரம்பிக்கப்பட்டவையாகும், இது சிங்களவர்கள் மீதான கட்டப்பாட்டை கைப்பற்றுவதற்காக அல்ல, ஆனால் தங்கள் சக தமீழர்கள் மீதான கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்காக நிலம்,மனித உயிர்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் பற்றிய இழப்புகளைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டவை. வறியவர்கள் மத்தியில் இழப்புகள் பற்றிய உணர்வு முறையான மீள்குடியேற்றத்தை அரசாங்கம் அலட்சியம் செய்வதை பற்றி ஏற்பட்டுள்ளது.
2009ன் ஆரம்பம் முதலே, இராணுவம் முன்னேறி வருவதன் காரணமாக அதற்கு முகம் கொடுக்காமல் எந்த வழியிலும்; தப்பிச் செல்ல பொதுமக்கள் விரும்பினார்கள் என்பது பெரும்பாலான தமிழர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து இருந்தது, மற்றும் தப்பிச் செல்ல முயலும் தமிழர்களை எல்.ரீ.ரீ, கொலை செய்தது. இருந்தும் பல முன்னணித் தமிழர்கள் மற்றும் ரி.என். தலைவர்கள் ஆகியோர், தமிழர்களின் துன்பங்களுக்கு பிரத்தியேகமாக இராணுவம் மட்டுமே காரணம் என்று குற்றம்சாட்டி வந்தார்கள். 20 வருடங்களுக்குள் சின்ன விஷயங்கள் கூட எப்படி மாறியுள்ளன. 21 ஒக்ரோபர் 1987ல் இந்திய இராணுவம் யாழ்ப்பாண மருத்துவ மனையில் எவ்வாறு படுகொலைகள் புரிந்தன என்பதனை ரஜனி விளக்கியுள்ளார்.
புலிகள் அங்கு இருந்தனர், அது எல்.ரீ.ரீ. பக்கமிருந்து வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியாகவும் இருக்கலாம். அவர்கள் இரண்டு தொகுதிகளாக உள்ளே வந்தார்கள். மருத்துவாகள் அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி கெஞ்சியபோது, புலிகள் பரவலாக சில சுற்று துப்பாக்கிச் சூடுகளை நடத்திவிட்டு, சில ஆயுதங்களை உள்ளே வைத்துவிட்டதன் பின்னரே புறப்பட்டுச் சென்றார்கள். இந்திய இராணுவம் ஒரு மணி நேரமோ அல்லது அதற்குப் பின்னரோதான் அங்கு வந்தார்கள், அந்த நேரம் எதிர்த்து பதிலடி கொடுப்பதற்கு உள்ளே யாரும் இருக்கவில்லை.
ஒரு போரை அரம்பிப்பதற்கு குழப்பங்கள் மற்றும் கொலைகளை ஏற்படுத்த வேண்டும். யுத்த முனையில் தான் தெரிவு செய்யாத ஒரு போரை நடத்தும் ஒரு வீரன்மீது பழி சுமத்துவதற்கும் ஒரு எல்லை உள்ளது. பொய்கள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு  போரைத் தக்க வைத்துக் கொள்பவர்கள், ஏராளமான தங்கள் சொந்த மக்களையே துன்பப்பட வைக்கிறார்கள், இவர்கள்தான் குற்றம் சுமத்தப்பட தகுதியானவர்கள். அதனால்தான் ஜூட் ரட்னத்தின் சொர்க்கத்தில் பேய்கள் ஆவணப்படத்திற்கு எதிரான பாரபட்சமான குற்றச்சாட்டுகள் ஒரு தீய வளையமாக உள்ளது.
எங்கள் காலத்தில் நடேச ஐயரைப் போன்ற ஒரு சிறந்த மனிதர் எம்மிடையே வாழ்ந்ததுக்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும், 20 வருடங்களுக்கு மேலாக துரதிஷ்டமான தோட்டத் தமிழ் மக்களின் துயரங்களுக்குச் சாட்சியாக இருந்த அவர், இந்த விஷயத்தை தீர்ப்பதற்கு பிரித்தானிய அல்லது இந்திய அரசாங்கத்தை நம்பியிருப்பது அர்த்தமற்றது என்பதை உணர்ந்தார். சிங்களவர்களுடன் பேசுவதால் மட்டுமே தங்களால் இதற்குத் தீர்வு காணமுடியும் என்று அவர் தீர்மானித்தார். பேர்னாட் அலுவிகார மற்றும் செனரத் குணவர்தன உட்பட்ட பல கண்டியத் iவைர்கள் அவரை மரியாதையாக நடத்தினார்கள், மற்றும் 1947ல் அவரது மரணத்துக்குப் பின்னரும் அவரது நம்பிக்கைகள் ஏமாற்றிவிடவில்லை. மனதில் கண்டிய விவசாயிகளின் நலன்களில் அக்கறை கொண்ட அநேக சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள், தோட்டத் தமிழர்களின் குடியுரிமையை மறுத்த குடியுரிமைச்சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்களில் ரி.பி.சுபசிங்கா, ரி.பி.இலங்கரத்ன, எச்.சிறி நிசங்க, என்.எம்.பெரேரா, றொபேட் குணவர்தன, குசுமா குணவர்தன, ஆர்.எஸ்.பெல்பொல மற்றும் .எம்.ஆர்..இரியகொல்ல ஆகியோர் அடங்குவார்கள். அவர்கள் வெறுக்கத்தக்க மரபுகளைக் கொண்ட சேனநாயக்க மற்றும் பண்டாரநாயக்கா ஆகியோரைக் கடந்து வரவேண்டியிருந்தது.

1948
ல் தொழிற் சங்க மசோதாவுக்கு ஆதரவாக சிங்கள வலதுசாரிகளுடன் கூட்டு சேர்ந்ததின் காரணமாக தமிழ் தேசியவாதிகள் சாத்தியமான சிங்களக் கூட்டணியினரை அலட்சியப்படுத்தி தாங்களே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். இப்போது தமிழர்களாகிய நாங்கள் மேற்கு, புது தில்லி மற்றும் ஜெனிவா என்று போய் தீர்வினைத் தேடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அது பிடிகொடாமல் எங்களிடம் இருந்து நழுவிக் கொண்டிருக்கிறது. சிங்களவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற நேரம் இது இல்லையா? இதுதான் ரஜனியின் இதயத்துக்கு நெருக்கமாக இருந்த ஒரு விடயம்.

நன்றி- தேனீ இணையம்